மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள சீதேவிமங்கலத்தில் மின் மோட்டாரின் சுவிட்சை நிறுத்திய போது, மின்சாரம் பாய்ந்து முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்த ஊராட்சியின் 1- ஆவது வார்டு மக்களின் குடிநீர்த் தேவைக்காக, ஊராட்சி நிதியிலிருந்து ஆழ்துளைக் குழாய் அமைத்து அதில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
செவ்வாய்க்கிழமை காலை மின் மோட்டாரை யாரோ சிலர் போட்டுச் சென்றதால், குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலமுத்து (70), பாதுகாப்பற்ற நிலையிலிருந்த மின் மோட்டார் சுவிட்சை நிறுத்தினார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீஸார் பாலமுத்து உடலைக் கைப்பற்றி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பற்ற முறையில் இருந்த மின் மோட்டாருக்கு வரும் மின் வயரை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.
இந்த மோட்டாரை சரி செய்ய பலமுறை வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.