திருச்சியில் இருந்து வியாழக்கிழமை இரவு கோலாலம்பூர் புறப்படத் தயாரான மலிண்டோ விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் அந்த விமானம் நிறுத்தப்பட்டது.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து இரவு 10.35 மணிக்கு வந்த மலிண்டோ விமானம், இரவு 11.30 மணிக்கு 174 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. ஓடுபாதையில் இருந்து விமானத்தை இயக்க முற்பட்ட போது, என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, விமானத்தை ஏர் பிரான் பகுதிக்கு கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து விமானத்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டபோதும், கோளாறு சரியாகவில்லையாம். இதனால், விமானம் கோலாலம்பூர் செல்வதில் சிக்கல் நீடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 17 மணி நேரத் தாமதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு 155 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. மீதமுள்ள பயணிகள் இரவு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.