திருச்சி மாநகராட்சியின் 34-ஆவது வார்டு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சியின் 65 வார்டு பகுதிகளிலும் ஆணையர் ந.ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுகாதாரக் கல்வி அளிக்கவும், தீவிர டெங்கு ஒழிப்புப் பணிக்காக தலா 20 பேர் கொண்ட 18 குழுவின் மூலம் 360 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொசுப்புழு ஒழிக்கும் பணி, புகை மருந்து அடிக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுதோறும் வரும் தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளர்களின் பணியை முழுமையாக செய்திட, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பொன்மலை கோட்டத்திலுள்ள 34-ஆவது வார்டு சுந்தர்ராஜ் நகர் பகுதியில் நகர்நல அலுவலர் ஜெகநாதன்,
உதவி ஆணையர் எம்.தயாநிதி ஆகியோர் குடியிருப்பு நலச்சங்கத்தை ஒருங்கிணைத்து கொசு ஒழிக்கும் பணியை சனிக்கிழமை தொடக்கி வைத்தனர்.
30 தெருக்களில் 80 தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளர்கள், 34 கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் நபர்கள், 24 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 20 நகர்புறச் செவிலியர்கள்,
4 சுகாதார ஆய்வாளர்கள் என 162 பேர் கொண்ட குழுவினர் 3080 வீடுகளில் கொசுப்புழு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.