திருச்சி ரோட்டரி சங்கம் சார்பில் இருதயப் பாதுகாப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக இருதய தினத்தையொட்டி, திருச்சி ரோட்டரி சங்கம் சார்பில் உழவர் சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமில், ராந மருத்துவமனையின் தலைமை இருதய நோய் மருத்துவர் ந.செந்தில்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பேசியது:
உலக இருதய தினத்தின் நிகழாண்டு மையக் கருத்து என் உதயம்- உங்கள் உதயம் என்பதாகும். புகைப்பிடித்தல் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நீங்கள் அப்பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் இருதயமும், நீங்கள் வெளியிடும் புகை மூலம் மற்றவரின் இருதயமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
மது தவிர்த்தல், முறையான உணவு, புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்துதல், தியானம் செய்தல், நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இருதயத்தைப் பாதுகாத்து மகிழ்வுடன் வாழலாம் என எடுத்துரைத்தார்.
ரோட்டரி மாவட்ட இயக்குநரும் ஆடிட்டருமான மோகன் முன்னிலை வகித்து, போலியோவை ஒழித்தது போல், இதர நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கும், உழவர் சந்தை வளாக வளர்ச்சிக்கான ஆலோசனைகள், நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த், உழவர் சந்தை கண்காணிப்பாளர் சமீம் வாழ்த்துரை வழங்கினர். மேலும், மருத்துவ முகாமுக்கு வந்த வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு மருத்துவர்கள் ந.செந்தில்குமார், மணிகண்டன், பாலா குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். நிறைவாக, ரோட்டரி சங்க இணைச் செயலர் குபேரன் நன்றி கூறினார்.