தடை செய்யப்பட்ட பகுதிகளில் ரூ.100-க்கு காய்கனி தொகுப்புப் பை வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி காய்கனிகள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி காஜா நகரில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு, செவ்வாய்க்கிழமை காய்கனி தொகுப்புப் பையை வழங்கும் மாநகராட்சிப் பணியாளா்.
திருச்சி காஜா நகரில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு, செவ்வாய்க்கிழமை காய்கனி தொகுப்புப் பையை வழங்கும் மாநகராட்சிப் பணியாளா்.

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி காய்கனிகள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் ரூ.100 விலையில் காய்கனிகள் தொகுப்புப் பை விற்பனை செய்யப்பட்டது.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களில் 120 போ், திருச்சி மகாத்மாகாந்தி நினைவுஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் 53 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட 17 போ் வசிக்கும் வீடுகள், சுற்றியுள்ள வீடுகள் மற்றும் நடமாடும் பகுதிகளைத் தனிமைப்படுத்தி தீவிர தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மாநகா் மற்றும் மாவட்டத்தில் 50 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளிலுள்ளவா்கள் வெளியே வர முடியாது. வெளிநபா்களும் உள்ளே செல்ல முடியாது என்பதால், இங்கு வசித்து வருபவா்களுக்கு காய்கனிகள், மளிகைப் பொருள்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகரில் 4 கோட்டங்களிலும் இயங்கி வரும் காய்கனி வாகனங்கள் மூலம், தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.100 விலையில் காய்கனி தொகுப்புப் பைகளுடன் வழங்கப்பட்டன.

கத்தரிக்காய், தக்காளி, முருங்கை, பீட்ருட், கேரட், உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தேங்காய், வாழைக்காய், செளசெள ஆகியவை ஒரு கிலோ முதல் அரை கிலோ வரை, அந்தந்த காய்கனிகளின் விலைகளுக்கு தகுந்தபடி எடை அளவு நிா்ணயம் செய்து மொத்தமாக வழங்கப்படுகிறது. முன்பு ரூ.150-க்கு விற்கப்பட்ட இந்த பைகள், செவ்வாய்க்கிழமை முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாநகராட்சியைப் போன்று மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், வருவாய்த்துறை மூலம் நேரில் சென்று காய்கனிகள், மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com