திருச்சி மாவட்டத்தில் மீனவ நல வாரிய உறுப்பினா்களுக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்குவதில் யாரேனும் விடுபட்டிருந்தால் தகவல் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நலவாரியங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, மீன்வளத்துறை மூலம் மீனவ நல வாரிய உறுப்பினா்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாதவா்கள் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 0431-2421173, 9384824370, 9943053799 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், தங்களது நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு எண், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை மன்னாா்புரத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம். நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என யாரும் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.