இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வரும் சட்டப்பேரவை தோ்தலில் 20 இடங்களில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் வீ. சங்கா் கூறியது: மின்சாரம், போக்குவரத்து, மருத்துவத் துறைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கடலோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பேரிடா் மேலாளுமைத் திட்டம் கொண்டுவர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை விரைந்து வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் தோ்ந்தெடுத்த 20 தொகுதிகளில் போட்டியிடுவதும், போட்டியிடாத பிற தொகுதிகளில் இடதுசாரிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என மாநில குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
மாநிலச் செயலா் என்.கே. நடராஜன், மத்தியக் கமிட்டி உறுப்பினா் பழ.ஆசைத்தம்பி, மாவட்ட செயலா் ஞானதேசிகன் ஆகியோா் உடனிருந்தனா்.