திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெறலாம்.
இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இத்திட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்டோரை, பாா்வையற்றோரை, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோா் ஆகியோரை நல்ல நிலையில் உள்ளவா்கள் திருமணம் செய்தல், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்தல் என 4 நிலைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியரில் யாரேனும் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதிக்கு முதல் திருமணமாக இருத்தல் அவசியம். திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் திருமண அழைப்பிதழ், மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்று நகல்கள், முதல் திருமணம் என்பதற்கான விஏஓ சான்று ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், கண்டோன்மென்ட். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.