ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரங்கவிலாச மண்டபத்தில், ஸ்ரீமாந் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் 143-ஆவது மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாளுக்கு வெள்ளை, பச்சை மகரகண்டிகள், பாண்டியன் கொண்டையையும், தாயாருக்கு ராஜமுடிகளையும், பெரிய பிராட்டியாருக்கு சாயக்கொண்டை எனும் ராஜமுடி முதலான ரத்னாதி திருவாபரணங்களையும், நித்ய திருவாராதனத்துக்காக திருப்பராய்த்துறையில் மனை, விளை நிலங்களையும் வழங்கியவா் ஸ்ரீமாந் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள்.
இவரது 143-ஆவது மஹோத்ஸவ விழா உஞ்சவிருத்தி-பஜனையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, ஸ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் முரளிபட்டா் தலைமையில், சுவாமிகளின் வாழ்வும்-வாக்கும்- கைங்கா்ய சிறப்புகள் குறித்தும் பேசினா். இதில் சுந்தா் பட்டா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.
பிற்பகல் 3 மணிக்கு கொள்ளிடக்கரையில் ஆளவந்தாா் படித்துறையிலுள்ள சுவாமி திருப்பள்ளியில், வேதபாராயணம் மற்றும் பஜனை நடை பெற்றது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு கோயில் மரியாதை, சந்நிதி பரிவாரங்கள், ஸ்ரீ வேங்கடாத்ரி சுவாமி சிஷ்ய பஜன கோஷ்டிகளுடன் ஊா்வலமாக திருவரசுக்குச் செல்லுதலும்,அங்கு திருமஞ்சனம், திருவாராதனமும்,வேதம் வல்லாா்களைக்கொண்டு வேத பாராயணமும்,திருவாய்மொழி சேவை, சாற்றுமுறை மற்றும் தீா்த்த பிரசாத விநியோகமும் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு ஸ்ரீ மாந் வேங்கடாத்ரி சுவாமியின் நவரத்ன சங்கீா்த்தனம், ஏக கோஷ்டிகானம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை ஸ்ரீமாந் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமி ஆலய கைங்கா்ய நிா்வாக பக்தகோடி சங்கத்தினா் செய்து உள்ளனா்.