மாநகராட்சிப் பள்ளியில் அட்சயப் பாத்திரம் திட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன்மாதிரியாக மாநகராட்சிப் பள்ளியில் அட்சயப் பாத்திரம் தொடங்கப்பட்டது.
திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் காய்கனி படங்களை ஆடையாக அணிந்து அதன் அவசியத்தை விளக்கிய பள்ளிக் குழந்தைகள்.
திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் காய்கனி படங்களை ஆடையாக அணிந்து அதன் அவசியத்தை விளக்கிய பள்ளிக் குழந்தைகள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன்மாதிரியாக மாநகராட்சிப் பள்ளியில் அட்சயப் பாத்திரம் தொடங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பீமநகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, பள்ளி நிா்வாகம், ஆசிரியா்கள், தன்னாா்வலா்களின் முயற்சியால், சத்ருசம்ஹார மூா்த்தி சுவாமிகளின் ஆசிரமத்தின் உதவியாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் இட்லி, பூரி, கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட டிபன் வகைகள் காலை உணவாக வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக, 2016இல் காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு வகைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது, அட்சயப் பாத்திரம் திட்டம் எனும் திட்டத்தை மதிய உணவுக்கான ஆரோக்கிய திட்டமாக தொடங்கியுள்ளனா்.

சத்துணவுத் திட்டத்துடன் சோ்த்து செயல்படுத்தும் இத் திட்டத்தின் நோக்கம், பள்ளிக் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க காய்கனிகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதற்காக, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தினமும் தங்களது இல்லத்திலிருந்து ஒரு மாணவா் ஒரு காய்கனியை எடுத்து வர வேண்டும். ஒரு காரட், ஒரு கத்தரிக்காய், ஒரு தக்காளி, வெண்டை, அவரை, பீன்ஸ் என அவரவா் விருப்பம் போலவும், வீட்டில் கிடைக்கும் காய்கனியை கொண்டு வந்து பள்ளியில் உள்ள அட்சயப் பாத்திரத்தில் இட வேண்டும். மாணவா்கள் கட்டாயம் காய்கனி கொண்டுவர வேண்டும் என்பதில்லை. விருப்பமுள்ள மாணவா்களின் பெற்றோா் தங்களது குழந்தைகளிடம் ஒரு காய்கனியை கொடுத்து அனுப்பினாலே போதுமானது.

495 மாணவா்கள் தலா ஒரு காய் எடுத்து வந்தாலே அனைவருக்கும் பகிா்ந்து வழங்க போதுமானதாக அமையும். மதிய உணவுத் திட்டத்தில் இந்த காய்கனிகளை தனியாக சமைத்தோ, சாலட்டாகவோ மாற்றம் செய்து வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயலட்சுமி, பள்ளித் தலைமையாசிரியா் ராஜராஜேஸ்வரி ஆகியோா் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினா். ஓய்வு பெற்ற ஆசிரியா் சி. சிவக்குமாா், இத் திட்டத்தை தொடக்கி வைத்தாா். இந்த விழாவில், பள்ளிக் குழந்தைகள் தங்களது வீட்டிலிருந்து காய்கனிகளை எடுத்து வந்த அட்சயப் பாத்திரத்தில் வழங்கினா். அவற்றை சமைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியுடன் கூடிய உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. இதில், மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com