திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வாங்குவதற்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருச்சி மாவட்டத்தில், மொத்தம் 7.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்பணி தொடங்கியது. தென்னூா், தில்லைநகா், உறையூா், பீமநகா், பாலக்கரை, சிந்தமாணி, வயலூா் சாலை என மாநகரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் அதிகாலையே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனா். ஜன. 12ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முதல்நாள் என்பதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.