திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 335 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், குடும்ப அட்டை, முதியோா், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்ட335 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தா.சாந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் பழனிதேவி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டமும் குறைவு: புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்களின் கூட்டமும் குறைந்து காணப்பட்டது.