திருச்சி: கேரளத்திடமிருந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
மிட்டாய் பாபு (முகம்மது பாபு) என்கிற ரவுடியால் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜய் ரகு நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கொலை செய்யப்பட்ட விஜய் ரகு தாயார், மனைவி தங்கா, மகள் காயத்ரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முருகன்,
"5 தனிப் படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடிவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்து பட்டியலினத்தைச் சேர்ந்த விஜயரகு குறித்து அவரது வீட்டில் விசாரிக்கையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக விஜய் ரகு தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கேரளத்திடமிருந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருக்கிறது. அதற்கு விஜய் ரகு கொலை வழக்கு ஒரு உதாரணம். அவரது 17 வயது நிரம்பிய மகளைத் திருமணம் செய்துதர வேண்டும் என்று தொடர்ச்சியாக ரவுடி மிட்டாய் பாபு வற்புறுத்தியதாகவும், இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதன் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எஸ்சி எஸ்டி பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையை வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து விஜய் ரகு குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் துறையினரிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த விசாரணையின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜுலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.