திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாக்கடை கழிவுநீரை விவசாய நிலத்தில் விடக்கூடாது, விவசாயத்திற்கு உள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது, விவசாய விளைபொருள்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஓய்வூதியமாக ரூ. 5000 வழங்க வேண்டும், காவிரி - அய்யாறு - உப்பாறு திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கி, அதனை நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று காலை, திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாக முன்பு காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.