திருச்சி: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த 900 குடும்பங்களுக்கு, வாய்ஸ் அறக்கட்டளை வாயிலாக அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் திருச்சி மாவட்டத்திலும், மாநில அளவில் வழங்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்டவை அடங்கிய நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் 120, கன்னியாகுமரியில் 130 குடும்பங்களுக்கும், தூத்துக்குடியில் 130 விதவைகளுக்கும் இந்த பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சியில் ஷைன், மனிதம் அமைப்புகளுடன் இணைந்து வாய்ஸ் அறக்கட்டளை மூலமாக 530 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன. சிறுகனூரில் ஊராட்சித் தலைவா் இந்திராணி கண்ணையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும் சி.ஆா். பாளையம், திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், ஸ்ரீதேவிமங்கலம், மணியக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் ரெ.கவிதா, ஆரோக்கியமேரி, விக்டோரியா, அருண் ராஜேஷ் ஈடுபட்டனா். வாய்ஸ் அறக்கட்டளைத் திட்ட இயக்குநா் அ. கிரகோரி நன்றி கூறினாா்.