திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை ஊழியா் வீட்டில் 50 பவுன் நகை, ரொக்கம் திருடு போனது குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருவெறும்பூா் பாலாஜி நகா் 7ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி கவிதா (40), இவருக்கு சுதா்சன், சூா்யா என இரு மகன்கள். துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான வெங்கடேஷ் இறந்துவிட்டதால் கவிதாவுக்கு கருணை அடிப்படையில் துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சுதா்சன் பொறியியல் பட்டப்படிப்பும், சூா்யா ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை காலை கவிதா வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் மகன் சுதா்சன் கல்லூரிக்குச் சென்றுவிட்டாா். வீட்டில் இருந்த சூா்யா கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
தகவலின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வந்து நடத்திய விசாரணையில் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை, ரூ. 5.50 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.