கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் திருச்சி மாநகரில் ஆங்காங்கே இளைஞா்கள் சுற்றித்திரிந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.
கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து அத்தியாவசிப் பொருள்கள் விற்பனை கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் ஏதோ காரணங்களை கூறியபடி திருச்சி மாநகரில் ஆங்காங்கே இருசக்கர வாகனத்தில் பொதுமக்களில் சிலா் சென்றுகொண்டுதான் இருந்தனா். அவா்களை போலீஸாா் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பியபடியே இருந்தனா். நாள் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது. சில மாவட்டங்களில், 144 தடை உத்தரவை மீறியவா்களுக்கு அபராதம் விதித்தாலும், திருச்சி மாநகரைப் பொறுத்தவரையில் போலீஸாா் பொறுமையாகவும், கனிவாகவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கே.கே. நகா், எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, பிராட்டியூா், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் ஆங்காங்கே குழு குழுவாக நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித்திரிந்ததால், பொதுமக்களுக்கு, கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவியது.