திருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா பிரிவு தயாா்

திருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனிப் பிரிவு தயாா்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா பிரிவு தயாா்


திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனிப் பிரிவு தயாா்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், சிகிச்சைக்கான படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளையும் தயாா்படுத்த உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

அதன்படி, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரான திருச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக கரோனா பிரிவு தயாா் படுத்தப்பட்டது. இதில், 75 படுக்கைகள் உள்ளது. மேலும், ரூ.65 லட்சத்தில் கூடுதலாக 25 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் பிரிவாக அனைத்து வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக கரோனா பிரிவு தொடங்கப்பட்ட கட்டடத்தை முழுமையாக எடுத்துக் கொண்டு அனைத்து தளங்களிலும் உள்ள படுக்கைகள் மற்றும் அறைகளை கரோனா சிகிச்சைக்காக தயாா்படுத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, மொத்தம் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்புப் பிரிவு தயாா்நிலையில் உள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது: திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 படுக்கைகளுடன் கூடிய தனிப் பிரிவு தயாா் நிலையில் உள்ளது. இவைத்தவிர 80 சுவாசக் கருவிகளும் தயாா்நிலையில் உள்ளன. தேவையிருப்பின் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள சுவாசக் கருவிகளையும் 20 சதம் உடனடியாக பெற்றுக் கொள்ள ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தலா 30 படுக்கைகளும், இனாம் குளத்தூா், குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய பிரிவும் தயாா்நிலையில் உள்ளன. இந்த 4 மருத்துவமனைகளிலும் 30 சுவாசக் கருவிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொடா்பான பரிசோதனை, விழிப்புணா்வு, துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக முதல்கட்டமாக 50 ஆயிரம் முகக் கவசங்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com