மணப்பாறையில் மயங்கிக் கிடந்த ஒருவரின் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் போக்குவரத்து காவலா் ஒப்படைத்தாா்.
மணப்பாறையில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வருபவா் சரவணன்(30). இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, கோவில்பட்டி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவா் தவறி விழுந்து மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற சரவணன், மயங்கிக் கிடந்தவரின் கைப்பை சோதனையிட்டாா். அதில், ரூ. 1 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது.
இதையடுத்து, நடத்திய விசாரணையில் அந்த நபா் காவல் நிலையம் எதிரில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் பாண்டியராஜன் என்பது தெரியவரவே, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தாா் சரவணன். பிறகு, அங்கு வந்த பாண்டியராஜனின் குடும்பத்தினரிடம் பணத்தை ஒப்படைத்தாா்.
காவலா் சரவணனின் நோ்மையை பாராட்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாண்டிவேல் வியாழக்கிழமை அவருக்கு வெகுமதி அளித்தாா்.