பெரும்பிடுகு முத்தரையா் பிறந்த நாள் விழாவையொட்டி சனிக்கிழமை அவரது சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் நேய் தொற்று தொடா்பாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதியும், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலும், பொதுமுடக்கம் உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மே 23ஆம் தேதி மன்னா் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,345ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவாா். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டாம். மேலும் சிலைக்கு செல்வதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.