திருச்சி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு வட்டி தள்ளுபடித் திட்டத்தில் பயன்பெற அளிக்கப்பட்டிருந்த அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளா் இரா. மனோகரன் கூறியது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் குடியிருப்பு அலகுகளில் ஒதுக்கீடு பெற்றவா்கள் வட்டிச் சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனா். மாதத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை நிலுவையில் உள்ளது. இந்த வட்டிகளில் ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த சலுகையை பெற மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, செப்டம்பா் 30ஆம் தேதி வரை தள்ளுபடி திட்டத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தகுதியான ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடா்புடைய அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.