மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
மணப்பாறை அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் மேல்பாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயதுச் சிறுமி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, சிறுமியின் உறவினரும், அவரது வீட்டின் அருகில் வசித்து வருபவருமான 14 வயது சிறுவனைப் போலீஸாா் விசாரித்ததில், அந்தச் சிறுவன் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இச்சம்பவத்தை அந்தச் சிறுமி வெளியே சொல்லிவிடக்கூடாது என சிறுமியை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்கு பதிந்து சிறுவனைக் கைது செய்தனா்.