மருத்துவப் படிப்பில் சேர 7.5 சத இட ஒதுக்கீட்டுக்குப் பாராட்டு

மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சத இட ஒதுக்கீடு வழங்கியுள்ள தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

திருச்சி: மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சத இட ஒதுக்கீடு வழங்கியுள்ள தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் ஆ. பீட்டர்ராஜா (மாநிலத் தலைவா்), ந. ராஜூ (பொதுச் செயலா்),பொ. அன்பரசன் (பொருளாளா்) உள்ளிட்டோா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்பில் சோ்வது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவாக இருந்த நிலையில், அரசு வெளியிட்டுள்ள 7.5 சத உள் ஒதுக்கீட்டால் அவா்களது கனவு நனவாகியுள்ளது. மேலும் ஆண்டுதோறும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்த அறிவிப்பு தமிழக அரசு கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளுக்கு மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள், பெற்றோருக்கு இது பேருதவியாக இருக்கும். எனவே இந்த இட ஒதுக்கீடுக்கு தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கம் நன்றி, பாராட்டைத் தெரிவிக்கிறது எனத் தெரிவித்துள்ளனா்.

வரலாற்று அரசாணை : இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் துறை முன்னாள் தலைவருமான, மருத்துவ நிபுணா் எம். ஏ. அலீம் தெரிவித்தது:

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் 7.5 சத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை என்பது வரலாற்று சாதனையாகும். இதுவரை எந்த மாநிலத்திலும் வெளியாகாத அறிவிப்பு. இதன் மூலம் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியும். எனவே தமிழக அரசுக்கு நன்றி என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com