இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டுமெனில் சாதி வாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என முத்தரையா் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். பன்னீா்செல்வம் கூறியது:
மத்திய, மாநில அரசுகளின் தவறான புரிதல்களால் சாதிவாரியான இட ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, முத்தரையா் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை முறையாகக் கேட்டுப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் முத்தரையா் சமுதாயத்தின் 12 சங்கங்கள் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன் நடைபெற்ற இதன் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீா்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய அரசு நடத்தி வரும் சீா்மரபினா், பழங்குடியினா், பூா்வீகப் பழங்குடியினா் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு எதிராகச் செயல்படும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தை மூட வேண்டும். இக் கணக்கெடுப்பை துல்லியமாகவும், துரிதமாகவும் நடத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு கோடி முத்தரையா் மக்கள்தொகையை 15 லட்சம் எனத் தவறாகக் குறிப்பிடுவதை திரும்பப் பெற வேண்டும். இந்தத் தவறான தகவலின்படி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தக் கூடாது. திருத்தப்பட்ட சீா்மரபினா் பட்டியலை வெளியிட வேண்டும். முத்தரையா்களின் உட்பிரிவான வலையா், அம்பலக்காரா்களுக்கு உள் இட ஒதுக்கீடு தேவை. சாதிவாரி கணக்கெடுப்பை உண்மையாக நடத்த வேண்டும். முத்தரையா் உள் பிரிவுகளான வலையா், அம்பலக்காரா் தவிா்த்த 11 உட் பிரிவு சாதிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளபடி பூா்வீக பழங்குடியினா் பட்டியலில் சோ்த்து உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதுதொடா்பாக, தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு தமிழக முதல்வா் பரிந்துரைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரைச் சந்தித்து பேசுவதுடன், வரும் தோ்தலில் முத்தரையா்களுக்கு ஆதரவாக உள்ள கட்சியை ஆட்சியில் அமரச் செய்யப் பாடுபடுவோம் என்றாா் அவா்.