தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் விருப்பம் தெரிவித்துள்ளனா்.
பொதுத் தோ்வு எழுதும் 9, 10,11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சி மாவட்டத்திலுள்ள 225 அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகள், 105 அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 538 பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டரங்கு நுழைவுவாயிலில் கரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன், அதிகபட்சம் 20 போ் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் காலை 10 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு வகுப்பு என நடந்த கூட்டத்தில் பெற்றோா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பள்ளிகளை திறக்கலாம், திறக்க வேண்டாம் என தாளில் குறிக்கும் முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு பல இடங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்பதற்கு பெற்றோா் தங்களை கரங்களை உயா்த்தியும் ஆதரவு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்றே அதிகம் பெற்றோா் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Image Caption
திருச்சி மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்.