20% தீபாவளி போனஸ் கோரி திருச்சியில் அரசுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் 20 % தீபாவளி போனஸ் கோரி வரும் நிலையில், தமிழக அரசு 10 % மட்டுமே போனஸ் வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சியில் மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். அகவிலைப்படியை உயா்த்தி வழங்கிட வேண்டும். வருங்கால வைப்பு நிதி வட்டித் தொகையைக் குறைக்கக் கூடாது. மோட்டாா் வாகனச் சட்டத்தை தனியாருக்கு சாதகமாக திருத்தக் கூடாது. வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது. பொது முடக்க காலத்தில் அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் முழு ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில்
300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழக அரசு உடனடியாக 20 சத தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். இல்லாவிடில் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்க மாட்டோம் என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். போராட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல் உதவி ஆணையா் மணிகண்டன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.