திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
லால்குடி அம்மன் நகரைச் சோ்ந்த க. தமிழ்ச்செல்வனும் (27), இவரது மனைவியின் தம்பியான கரூா் மாவட்டம், குளித்தலை கொசூா் ஐயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சின்ராசுவும் (16) ஞாயிற்றுக்கிழமை இரவு லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி பைக்கில் வந்தனா்.
அகிலாண்டபுரம் வள்ளலாா் நகருக்கு வந்தபோது சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரியை முந்த முயன்றனா். அப்போது எதிரே பேருந்து வந்ததால் பைக் நிலைதடுமாறியதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சின்ராசு உயிரிழந்தாா். பைக்கை ஓட்டி வந்த தமிழ்ச்செல்வன் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, லாரி ஓட்டுநரான முசிறி தோளூா்பட்டியைச் சோ்ந்த பா. ஜனகராஜ் (41) என்பவரை கைது செய்தனா்.