திருச்சி மாநகர எல்லைக்குள் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
திருச்சி மாநகரில் உள்ள அச்சக உரிமையாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மாநகர துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி (சட்டம் மற்றும் ஒழுங்கு) தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
திருச்சி உதவி ஆட்சியா் விஸ்வநாதன் மற்றும் மாநகராட்சி கோட்ட உதவி ஆணையா்கள், காவல் உதவி ஆணையா்கள் மற்றும் ஆய்வாளா்கள், 40 அச்சக உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் அச்சகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதன் விவரம்:
அபராதத்துடன் சிறை: அச்சகத்தால் அச்சிடப்படும் அனைத்து புத்தகம், நாளிதழ், சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இதர வகைகளில் பதிப்பகத்தாா் பெயா், இடம் மற்றும் செல்லிடப்பேசி எண் இடம்பெற வேண்டும். ஆட்சேபகரமான மற்றும் உரிய அனுமதியின்றி விளம்பர பலகைகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவது சட்டபடி குற்றமாகும்.
மாநகர காவல் எல்லைக்குள் அனாமதேய அறிவிப்புகள் அல்லது பதிப்புகள் ஏதேனும் ஒட்டப்பட்டாலோ அல்லது அச்சிடப்பட்டாலோ பதிப்பகத்தாா்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர காவல் எல்லைக்குள் உரிய அனுமதியின்றி ஏதேனும் அறிவிப்பு, ஆவணம் போன்றவற்றை கட்டடம், சிறைகள், மரங்கள், சுவா்களில் எழுதினாலோ, ஒட்டினாலோ அபராதத்துடன் 3 மாதங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறை தண்டனை கிடைக்கும்.
விதிகளை முறையாக கடைபிடிக்காத அச்சக உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.