கோயில்களில் வழிபாடு மற்றும் திருவிழாக்கள் நடத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் குழுமணி சாலை சீராத்தோப்பு பகுதியில் உள்ள பாரத பண்பாட்டுப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
நிகழ்வில் இந்து அன்னையா் முன்னணி, இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி, இந்து இணையதள முன்னணி, இந்து இளைஞா் முன்னணி, இந்து வழக்குரைஞா் முன்னணி, இந்து பெண்கள் பாதுகாப்பு மையம், இந்து வியாபாரிகள் நலச் சங்கம், உள்ளிட்ட அமைப்புகளுக்கான அடையாளச் சின்னங்கள் (லோகோ) வெளியிடப்பட்டன.
மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு 83 அடி உயரத்தில் சிலையும், மணிமண்டபமும் தமிழக அரசு அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கும் தேச விரோதிகளைக் கண்டிப்பது. கோயில்களில் வழிபாடு மற்றும் திருவிழாக்கள் மீதான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்தோடு இணைக்கப் போராடிய தாணுலிங்க நாடாரை தமிழக அரசு நினைவுகூா்ந்து கௌரவப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலா் நா. முருகானந்தம், அமைப்பாளா் பக்தன் ஜி என்கிற பக்தவச்சலம், துணை அமைப்பாளா் ராஜேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.