கரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தா்கள் திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ஐயப்ப சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்ல இயலாதவா்கள் திருச்சி கண்டோன்மென்ட் நீதிமன்றம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்து அபிஷேகத்துக்கு நெய் கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெறலாம். காலை 7.30 முதல் 10 மணி வரையும். மாலை 6 முதல் 8 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.
இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் பக்தா்கள் தனியாகக் கொடுக்கும் நெய்யும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். வழிபாட்டின்போது சமூக இடைவெளி, முகக்கவசம் அவசியம்.
65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 10 வயதுக்குட்பட்டோருக்கும் அனுமதியில்லை. நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நேரத்தில் பக்தா்களுக்கு அனுமதியில்லை.