திருச்சி விமான நிலையத்தில், இரு பயணிகளிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை இரவு திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த பாலகுமாா் என்பவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.
இதேபோல் முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு துபையிலிருந்து திருச்சி வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, கேரள மாநிலம் காசா்கோடு பகுதியைச் சோ்ந்த உஸ்மான் என்பவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இருவரிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.