திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்ல பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வழியில் இடையூறாக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குச்சிகள் அகற்றப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை அஞ்சலக சிக்னலிலிருந்து ஐயப்பன் கோயில் ரவுண்டானா (எம்ஜிஆா் சிலை) வரை சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் செல்ல பிரத்யேக வழி அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை அடையாளம் காணும் கையில் மஞ்சள், வெள்ளை வண்ண பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதையை அடையாளம் காட்டும் வகையில் ஆங்காங்கே பிளாஸ்டி குச்சிகள் நடப்பட்டிருந்தன. இவை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த பிளாஸ்டிக் குச்சிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இடையூறின்றி வாகனங்களை இயக்கிச் செல்கின்றனா்.