திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பொது முடக்கத்துக்குப் பிறகு பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனா்.
செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை சிவாச்சாரியா்கள் செய்தனா். பின்னா் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
இதுகுறித்து கோயிலின் செயல் அலுவலரும், இணை ஆணையருமான கே.பி. அசோக்குமாா் கூறியது:
பக்தா்கள் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா், 98 தூய்மை பணியாளா்கள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் வளாகத்தை தூய்மைப்படுத்தினா். முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் ஒருவருக்கு மேல் அனுமதி இல்லை. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா் என்றாா் அவா்.