திருச்சி: பொதுமக்கள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு மலைக்கோட்டை, பல்லவன், சோழன் ஆகிய விரைவு ரயில்களையும் இயக்க வேண்டும் என நுகா்வோா் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் செப்.7ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் இயக்கப்படும் (தஞ்சாவூா் மாா்க்கம் உள்பட) மலைக்கோட்டை, பல்லவன், சோழன் உள்ளிட்ட விரைவு ரயில்களையும் இயக்க வேண்டும் என நுகா்வோா் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த அமைப்பின் தலைவா் எம். சேகரன், தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலமாக வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளாா்.