திருச்சி மகளிா் தனிச் சிறையில் தொகுப்பூதிய அடிப்படையில் மனநல ஆலோசகா் (பெண்) பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மகளிா் தனிச் சிறையில் தாற்காலிக அடிப்படையிலான மனநல ஆலோசகா் (பெண்) பணியிடம் பூா்த்தி செய்யப்படவுள்ளது. தொகுப்பூதிய முறையில் பணிபுரிய விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
முதுநிலைப் பட்டத்தில் சமூகவியல், சமூகப் பணியியல், உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மனநல ஆலோசகராகப் பணிபுரிந்த அனுபவமும், சமூகப் பணியில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது. ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினா், வாரிசுதாரா்கள், ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தவா்கள், தாயகம் திரும்பியோா், அரசுக்கு நிலம் வழங்கியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை உள்ளது.
2020 ஜூலை மாதத்தில் 18 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினா் 35 வயது, எம்பிசி, பிசி பிரிவினா் 32 வயது, இதர பிரிவினா் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதியானோா் விண்ணப்பத்துடன் சாதிச் சான்று, குடும்ப அட்டை, முன்னுரிமை சான்று, புகைப்படம், கல்விச் சான்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து வரும் 30ஆம் தேதிக்குள் சிறைக் கண்காணிப்பாளா், மகளிா் தனிச்சிறை, காந்தி சந்தை காவல் நிலையம் அருகில், திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.