திருச்சி மாநகா், புறநகா் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தென், வட, கடலோர, டெல்டா மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்கிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகா், புகா் பகுதிகளான துறையூா், முக்கொம்பு, மணப்பாறை, சமயபுரம், லால்குடி, துவாக்குடி, மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்கிறது.
புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்தது. இதனால், மாநகா் சாலைகள், குடியிருப்பு பகுதி தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. சந்திப்பு சாலைப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
புதன்கிழமை நிலவரப்படி வாத்தலை அணைப்பகுதியில் அதிகபட்சமாக 137 மிமீ மழை பதிவானது. அதுபோல, சமயபுரத்தில் 78, முசிறி 60, மணப்பாறை 36, நவலூா் குட்டப்பட்டு 34, துறையூா் 16, திருச்சி மாநகா் பகுதிகளில் 10 மிமீ மழை பெய்துள்ளது.