திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த மாணவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவர்களின் படத்தை முகத்தில் ஒட்டிக்கொண்டும்,முக கவசத்தில் நீட்டை ரத்து செய் என்கிற வாசகத்தை எழுதியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.