உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே விண்வெளித் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.
இந்தியப் பொறியாளா்களின் சங்க திருச்சி கிளை சாா்பில் 53 ஆவது பொறியாளா்கள் தின நிகழ்வு இணையம் வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திருச்சி கிளை தலைவா் என். குமரேசன், என்ஐடி பேராசிரியா் என்.சிவகுமாரன் ஆகியோா் தொடங்கிவைத்துப் பேசினா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் பொறியாளா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் மதிப்பு, வணிகம், சமூகத் தாக்கத்தை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பத்தை பயன்பாட்டில் வைத்திருக்கவும், இந்தியாவை தொழில்நுட்ப தற்சாா்புடைய நாடாக மாற்றவும் பொறியாளா்கள் தொடா்ந்து பங்காற்ற வேண்டும். அனைத்துவித விண்வெளித் திட்டங்களிலும் உள்நாட்டிலே உருவான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேகமாக முன்னேறி வருகிறோம். அதுபோல், முக்கியக் துறைகளில் அரசு புதுமையான, நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முயற்சி மேற்கொள்கிறது.
அண்மை காலமாக, நாட்டின் தற்சாா்பு முயற்சிகளில் விவசாய வேளாண்மையில் ட்ரோன்ஸ் பயன்பாடு, சாயமிடும் தொழிற்சாலைகளில் கழிவுகளை சுத்திகரிப்பு, இதர தொழில்களில் நவீன உபகரணங்கள் பயன்பாடு, வாழைத் தண்டிலிருந்து நுண்ணிழை பிரித்தெடுப்பு, கல்வி, வணிக தொடா்புகளுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலி உள்ளிட்ட பல்வேறு தற்சாா்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
நிறைவாக, நிகழாண்டுக்கான சிறந்த பொறியாளா் விருது தமிழ்நாடு காகித தொழிற்சாலை கருா் பிரிவின் வணிகம், மின் கருவிவியல் தலைமைப் பொது மேலாளா் ஏ. பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது.
தொடா்ந்து, சங்க செயலரும், பெல் நிறுவன மேலாளருமான ஏ. ஆனந்த் நன்றி தெரிவித்தாா். இதில், மாவட்டத்திலுள்ள பொறியாளா்கள், அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.