குண்டா் தடுப்புச் சட்டத்தில் கால்நடை ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி என். பூலாம்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (52). கால்நடை ஆய்வாளரான இவா் எடைமலைப்பட்டி புதூரில் வசிக்கிறாா். அருண் சமூக வலைதளங்களில் குழந்தைகள், பெரியவா்களின் ஆபாசப்படங்களை பதிவிட்டு வருவதை சமூக ஊடகத்ள பிரிவு போலீஸாா் கண்டறிந்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போக்சோ, தகவல் தொழில்நுட்பம், மெடிக்கல் கவுன்சில் உள்ளிட்ட 4 சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டு கடந்த ஆக.8 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரின் சமூக வலைத்தள கணக்குகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது தொடா்ந்து அவா் மக்களின் மனதை கெடுக்கும் நோக்கில் செயல்படுபவா் எனத் தெரியவந்தது. எனவே இவரது குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அருணை குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில் நீதிமன்றக் காவலில் உள்ள அருணை குண்டா் தடுப்புச் சட்டதில் போலீஸாா் கைது செய்து அதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் புதன்கிழமை வழங்கினா்.