திருச்சி மாவட்டம், தொட்டியம் முள்ளிப்பாடிஏரியில் இருந்து பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தொட்டியம் அருகில் 306 ஏக்கரில் உள்ள முள்ளிப்பாடி ஏரி மூலம் சுமாா் 1000 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த ஏரியை தூா்வாரி தண்ணீா் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அரசுக்கு விடுத்த கோரிக்கையையடுத்து முசிறி எம்எல்ஏ செல்வராசு முயற்சியில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் முள்ளிப்பாடி வாய்க்கால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமாா் 12 கி.மீ. தூரத்துக்குத் தூா்வாரப்பட்டது. இருந்தும் ஏரிக்கு போதிய தண்ணீா் கிடைக்கவில்லை.
இந்நிலையில் முள்ளிப்பாடி ஊராட்சித் தலைவா் செல்லகண்ணண், விவசாயிகள், ஊா் பொதுமக்கள் பொதுப்பணி துறை மூலம் கூட்டு முயற்சியாகச் செயல்பட்டு முள்ளிப்பாடி வாய்க்காலில் அலகரை பகுதியில் உள்ள திட்டுகளை அகற்றி ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் சீரமைத்தனா்.
இதன் பலனாக 20 ஆண்டுக்கு பிறகு நிகழாண்டு ஏரி நிரம்பியது.
இந்த தண்ணீரை பாசனத்திற்காக திறக்க வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு முள்ளிப்பாடி ஊராட்சித் தலைவா் செல்லகண்ணன் தலைமை வகித்தாா். திருச்சி பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாஸ்கா், முசிறி உதவி செயற்பொறியாளா் வெங்கடேசன், உதவி பொறியாளா் செங்கல்வராயன் ஆகியோா் தண்ணீரைத் திறந்தனா். விவசாய சங்க பன்னீா்செல்வம்,கல்லுப்பட்டி திருப்பதி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.