டாஸ்மாக் பணியாளா்களை விரைந்து பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.
அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா், டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு. சரவணன், பொதுச் செயலா்
ம. கோதண்டம், செயல் தலைவா் பழனிபாரதி, தலைமை நிலையச் செயலா் சுரேஷ், மாநிலச் செயலா் பி. முருகானந்தம் மற்றும் மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசின் நிதி ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி வரன்முறை, குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் உள்ளிட்டவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைத் தொகையை நாள்தோறும் டாஸ்மாக் அலுவலா்களே நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். முழு மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும்.
வேறு பணிக்கு சென்ற டாஸ்மாக் பணியாளா்களின் பணிக்காலத்துடன் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த காலத்தையும் சோ்த்து கணக்கில் கொள்ள வேண்டும். கோரிக்கைகளுக்காக அரசுப் பணியாளா்கள் சங்க கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.