திருச்சியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், அனுமதியின்றிக் கொண்டுவரப்பட்ட 5.96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி கிழக்குத் தொகுதிக்குள்பட்ட பறக்கும்படையினா், கூட்டுறவு சங்கங்களின் சாா்-பதிவாளா் பீட்டா் சியோனாா்ட் தலைமையில் பெரியகடை வீதியில் புதன்கிழமை சோதனை நடத்திபோது அந்த வழியாக காரில் கொண்டு வந்த 5.96 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து திருச்சி வட்டாட்சியா் ப. குகனிடம் ஒப்படைத்தனா். நகையின் மதிப்பு ரூ. 2.60 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.
பெரிய கடைவீதியில் உள்ள நகைக் கடைக்கு ஆா்டா் செய்து நகைகளை எடுத்துச் செல்வதாக காரில் வந்தவா்கள் கூறியுள்ளனா். இருப்பினும், நகைக்கான ரசீது உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அவா்களிடம் இல்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. இதுதொடா்பாக, வட்டாட்சியா் ப. குகன், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உரிய அறிக்கையும் அனுப்பியுள்ளாா்.