திருவெறும்பூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப. குமாா் தொகுதிக்குள்பட்ட கனரக உலோக ஊடுருவி தயாரிப்பு தொழிற்சாலை, இலந்தப்பட்டி, காந்தலூா், பெரியசூரியூா், சின்ன சூரியூா், போலீஸ் காலனி, அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் கூறியது:
தோ்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றித் தருவது அதிமுக அரசு மட்டுமே. தோ்தலுக்காக மட்டுமே அறிக்கை வெளியிடுவது திமுக. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும். வாஷிங் மிஷின், ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். மகளிா் சுய உதவிக் குழு கடன், நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அனைத்துத் திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு பெற்றுத்தருவேன் என்றாா். அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் சென்றனா்.