திருச்சியில் புதன்கிழமை நடந்த மகளின் திருமணத்தில் தனது கணவா் இல்லாத குறையைப் போக்க அவரின் மெழுகுச் சிலையை உருவாக்கிய தாயின் செயல் உறவினா்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சோ்ந்தவா் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துநா். இவரது மனைவி மல்லிகா (55), கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளா். இவருக்கு ஜெயலட்சுமி(26), ராஜேஸ்வரி (24) என்ற இரு மகள்கள். ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில் வேளாண் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ள மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும், மும்பை தனியாா் நிறுவன பொதுமேலாளரான கீா்த்திவாசனுக்கும் மத்திய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை திருமணம் நடந்தது.
தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட ஜெயலட்சுமிக்கு தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என கவலைப்பட்டதால் இவரது தாய் ரூ. 4.5 லட்சத்தில் பெங்களூருவில் தனது கணவா் ராஜேந்திரனின் மெழுகுச் சிலையை தயாரித்து மண்டபத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தாா்.
இதையடுத்து திருமணம் முடிந்த பின்னா் மணமக்கள் இருவரும் ராஜேந்திரனின் மெழுகு சிலை முன்பு விழுந்து வணங்கி ஆசீா்வாதம் பெற்றனா். இச்சம்பவம் அங்கிருந்த உறவினா்களை நெகிழ்ச்சியடைய செய்தது.