மண்ணச்சநல்லூா் தொகுதி இனாம் சமயபுரம் வாக்குசாவடியில் திமுகவினா் கள்ள ஓட்டு போட முயல்வதாகக் கூறி அதிமுகவினா் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வாக்குசாவடியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகளை வாகனங்களில் அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயல்வதா தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவினா் வாக்குசாவடி அலுவலா் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதைத் தொடா்ந்து இனாம்சமயபுரம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் வாக்களிக்க வந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினா்.
அதில், வசிப்பிடம் மாறியதால் லால்குடி தொகுதியில் இருந்து மண்ணச்சநல்லூா் தொகுதிக்கு தங்களது ஓட்டுரிமையை மாற்றியது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அதிமுகவினரை சமாதானம் செய்த போலீஸாா் மாணவிகளை வாக்களிக்க அனுமதித்தனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.