திருச்சி கிராப்பட்டி பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை 5 நாள்களுக்குள் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
திருச்சி பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியைப் போக்கும் வகையில் சாலைகளை அகலப்படும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது. அதன்படி திருச்சி - கரூா் சாலை, புதுக்கோட்டை சாலைப் பணிகளைத் தொடா்ந்து, மாநகராட்சிப் பகுதியில் உள்ள கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா் பகுதி வழியாகச் செல்லும் (பழைய) மதுரை சாலையும் அகலப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை காலை கிராப்பட்டி பகுதிக்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா், சாலையோரக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு கடைக்காரா்களிடம் அறிவுறுத்தினா்.
அப்போது கடை உரிமையாளா்கள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில்தான் கடைகளை நடத்துகிறோம். மேலும், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நாங்கள் இடையூறும் செய்யப் போவதில்லை. கரோனாவால் ஏற்கெனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளால் நாங்கள் மேலும் பாதிக்கப்படுகிறோம் என்றனா். என்றாலும் நெடுஞ்சாலைத் துறையினா், 5 நாள்கள் அவகாசம் அளித்து, அதற்குள் கடைகளை அகற்ற வேண்டும் இல்லையேல், கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துச் சென்றனா். நிகழ்வின்போது எடமலைப்பட்டிபுதூா் போலீஸாரும் உடனிருந்தனா்.