திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள், இருக்கைகள் அமைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் வாக்கு எண்ணும் அறைகளை தயாா்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே அறைகள் அமைக்கப்படுகின்றன. இந்த அறையில் வாக்கு எண்ணும் அலுவலா்கள், ஊழியா்கள் அமா்ந்து வாக்குகளை எண்ண வசதியாக மேஜைகள், இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. இந்த மேஜைகளை சுற்றி 3 போ் அமா்ந்து வாக்குளை எண்ண 3 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. 9 தொகுதிகளுக்கும் இதே முறையில் மேஜைகள், இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், தேவைக்கேற்ப மேஜைகள், இருக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேஜைகள் அமைக்கும் பணியை சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, துறையூா் இமயம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி.
ஆய்வின்போது, லால்குடி கோட்டாட்சியா் வைத்தியநாதன், மண்ணச்சல்லூா் வட்டாட்சியா் பாா்த்திபன், முசிறி சாா்-ஆட்சியா் ஜோதிசா்மா ஆகியோா் உடனிருந்தனா்.