திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை திமுகவினா் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து அதற்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த தனியாருக்கு சொந்தமான மாருதி காரில் எல்இடி திரைகள், மின்னணு பொருள்கள், ஒயா்கள் என எலக்ட்ரானிக்ஸ் தொடா்புடைய பொருள்கள் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த திமுகவினா், அந்த காரை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜுக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த அவரும் தனது ஆதரவாளா்களுடன் மையத்தில் இருந்த தோ்தல் பிரிவு அலுலா்களுடன் வாக்குவாதம் செய்தாா்.
அப்போது வாக்கு எண்ணும் பணியின்போது, வாக்கு எண்ணும் அறையில் நடைபெறுவதை விடியோவில் பதிவு செய்து தோ்தல் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் பாா்வையிட எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். இந்தப் பணியானது தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. எனவே, எல்இடி திரை மற்றும் அதுதொடா்பான உபகரணங்களை கொண்டு வந்தபோது திமுகவினா் தவறுதலாக தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாக்கு எண்ணும் மையத்தின் அனைத்து சிசிடிவி கேரமா பதிவுகளையும் பாா்வையிட வேண்டும் என இனிகோ இருதயராஜ் கூற, இதையடுத்து கேமரா பதிவுகளை பாா்வையிட்டபோது, வாக்கு எண்ணும் பணிக்காகவே அந்த காா் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து முன்அனுமதி பெறாமல், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கட்சியினரிடம் உரிய தகவல் தெரிவிக்காமல் எந்தப் பணியும் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறிச் சென்றாா். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.