தொட்டியம் அருகே வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடா்பாக 5 போ் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
வரதராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 1-4-2016 முதல் 30-9-2018 வரை பணிபுரிந்த 5 பேரால் ரூ. 9 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மகளிா் குழுவினா், பொதுமக்கள் உரிய விசாரணை கோரி போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூட்டுறவு சங்க மேலதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் தற்போது கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணிபுரிந்த செயலா் சே. சிங்காரம், எழுத்தா் பி. கணேசன், காசாளா் ப. ஆராயி, முதுநிலை எழுத்தா் பெ. மணிவேலு, ஏவலா் ப. தங்கவேலு ஆகியோரை சங்கச் செயலாட்சியா் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.