திருச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலாத் தலம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு, ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகரிப்பால் சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் மக்கள் கூடும் இடங்களை மூட நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி திருச்சியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சில கோயில்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கும், காவிரியாற்றில் பொதுமக்கள் கூடவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
அந்த வகையில், ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலாத்தலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையே முக்கொம்பு பூங்கா மற்றும் தடுப்பணைகள் மூடப்பட்டன. நுழைவாயிலில் இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.